பொன்னியின் செல்வன் கதையைப் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் சோழர்களின்
வரலாற்று பின்னணியை அறிந்துக்கொள்வது மிகவும் அவசியம். இந்தக் கதையைக் கற்பனைக் கலந்து
படைத்திருந்தாலும் முக்கிய கதாபாத்திரங்கள் வரலாற்றில் உண்மையாக வாழ்ந்தவர்கள்.
கதையை
மேலோட்டமாகப் பார்த்தால் அரசியல் சூழ்ச்சி, குழப்பம் போல்
தோன்றும் உண்மையில் குந்தவைப் பிராட்டிக்கும், நந்தினி தேவிக்கும்
இடையே ஆன போட்டியே இக்கதை.
சோழப் பேரரசர் கண்டராதித்தருக்கு வாரிசு இல்லாத காரணத்தால் அவர் தன் தம்பி
அரிஞ்சயனுக்குப் பட்டம் சூட்டுகிறார். அரிஞ்சயனும் ஒரு வருடத்தில் இறக்கவே
அவரது மகன் சுந்தரச்சோழர் அரச பதவியை
ஏற்கிறார். வயதான காலத்தில் கண்டாதித்தர் செம்பியன் மாதேவியை மணக்க
மதுராந்தகர் பிறக்கிறார். இருப்பினும் தனது தம்பியின் வாரிசுகளே
நாட்டின் வாரிசுகள் என்றும். தனது மகனை இறைப்பணியில் ஈடுபடுத்துமாறுக் கூறி இறக்கிறார். சுந்தர சோழரின் மகள் குந்தவை
பழையாறையில் வசிக்கிறாள். சுந்தரசோழனின் மூத்த மகன் ஆதித்த
கரிகாலன் இளவரசு பட்டம் பெற்று பாண்டியனை வென்றுக் காஞ்சியில் பொன்மாளிகையைக் கட்டுகிறார்.
இளைய
மகன் அருள்மொழிவர்மன் இலங்கையில் மகிந்தனை வெல்ல படையுடன் சென்று இருக்கிறான். இவர்களின் செயல்கள் பிடிக்காமல் சோழ
நாட்டின் தளபதியும், தன அதிகாரியுமான பெரிய மற்றும் சிறிய பழுவேட்டரையர்கள் அரசர்
சுந்தரசோழரை தனிமைபடுத்துகிறார்கள். இந்த நிலையில்தான் பொன்னியின் செல்வன்
கதை ஆரம்பிக்கிறது.
ஆதித்தகாரிகாலனின் ஓலையைச் சுமந்துக்கொண்டு தஞ்சையை நோக்கி பயணிக்கிறான்
வந்தியதேவன். வழியில் ஆழ்வார்க்கடியான் என்பவரைச் சந்திக்கிறான். அவன்
தங்கைதான் பெரிய பழுவேட்டரையர் வயதான காலத்தில் மணந்திருக்கும் நந்தினிதேவி
என்கிறார். பின்னர் அவன் நண்பன் கந்தமாறனின் கடம்பூர் மாளிகையில் தங்க
நேரிடுகிறது. அன்று இரவு சோழமண்டலத்தின் பதிமூன்று வேளிர்களும் பெரிய
பழுவேட்டரையரும் சேர்ந்து அடுத்த அரசரைத் தேர்ந்தெடுக்க ரகசிய ஆலோசனைக் கூட்டம்
நடத்துகிறார்கள். இதனை அறிந்த வந்தியதேவன் எதுவும் தெரியாதவன்
போல் தஞ்சையை நோக்கிப் பயணிக்கிறான். தஞ்சை சொல்லும் வழியில் நந்தினி
தேவியைச் சந்தித்து நயச்சியமாகப் பேசி முத்திரை மோதிரத்தைப் பெறுகிறான்.(உண்மையில்
நந்தினி வேண்டும் என்று தான் மோதிரத்தைக் கொடுக்கிறாள்). பெரிய பழுவேட்டரையரின்
இலச்சினை என்பதால் எளிதில் மன்னைரைக் கண்டு ஆதித்தனின் ஒலையைக் கொடுக்கிறான்.
இதனால்
சந்தேகம் அடைந்த சிறிய பழுவேட்டரையர் வந்தியதேவனை சிறைப்படுத்த
மீண்டும் நந்தினியின் உதவியால் கோட்டையை விட்டு வெளியேறுகிறான். கோட்டைக்கு
வெளியே சேந்தன் அமுதனின்(இவனே உண்மையான மதுராந்தகச் சோழன்,
அப்படி
எனில் அரண்மனையில் இருப்பது யார்?) உதவியுடன் பழையாறைச் சென்று குந்தவை
பிராட்டியைச் சந்தித்து ஓலையைக் கொடுக்கிறார். அவளும் ஓலையைப்
பெற்றுக்கொண்டு, வந்திய தேவனை இலங்கையில் இருக்கும் இளைய
தம்பி அருள்மொழி வர்மனை அழைத்துவரும் பணியைக் கொடுக்கிறாள். இதற்கு இடையில்
காஞ்சியில் ஆதித்தன் தன் நண்பனிடன் தனது கடந்த காலத்தைக் கூறுகிறான். அதில்
தனது சிறிய வயது காதலிதான் நந்தினி, தமக்கையின் அலட்சியத்தால் நந்தினி
மிகவும் துன்பம் அடைந்தாள், பின்னர் அவளைப் போர் நிமித்தம் பிரிய
நேர்ந்தது. பின்னர் ஆறு வருடம் கழித்து நந்தினியை, போரில் காயம் அடைந்த
பாண்டியனைத் துரத்தும் போது சந்தித்தேன், அவள் அவனை விட்டுவிடுமாறு வேண்டினாள்,
மேலும்
பாண்டியன் தன்னை மணந்து பட்டத்து ராணியாக்குவதாக வாக்கு தந்துள்ளான் என்றும்
மன்றாடினாள். தனது காதலியை மணக்க கேட்டவன் என்ற காரணத்தால் ஆத்திரத்தில்
பாண்டியன் தலையை துண்டித்துவிட்டேன் என்கிறான் ஆதித்தன். அக்கணத்தில்
நந்தினியின் வதனத்தில் தோன்றிய வெறுப்பு, குரோதம் இதனை வார்த்தையில் வர்ணிக்க
முடியாது என்கிறான். மேலும் தற்பொழுது தனதுப் பெரிய பாட்டனை மணந்துள்ளாள், அதனால்
தான் தஞ்சைச் செல்ல பயப்படுவதாகக் கூறுகிறான். அதனால் தனது தம்பியை
அழைத்து வர பார்பேந்திரனை இலங்கைக்கு அனுப்புகிறான் ஆதித்தன்.
மீண்டும் சேந்தன் அமுதனின் உதவியால் அவனின் முறைப்பெண் பூங்குழலியுடன்
இலங்கைச் செல்கிறான் வந்தியதேவன். பார்பேந்திரன்
அவனுக்கு தெரியாமல் பாண்டிய விசுவாசிகளுக்கு உதவி செய்து அருள்மொழி வர்மனின்
உயிருக்கு ஆபத்து நேரிடும் வேலையைச் செய்கிறான். அந்த நேரத்தில் நந்தினி
பாண்டியர்களின் ஆபத்துதவிகளுடன் சேர்ந்து சதி வேலையில் ஈடுபடுகிறாள். சோழர்களின்
பொக்கிஷத்தை(தங்கம்) பாண்டியர்களுக்குத் தாரை வார்க்கிறாள்,
பெரிய
பழுவேட்டரையர் அறியாமல், மேலும் ஆதித்தனை கடம்பூர் மாளிகையில்
சந்திக்க கந்தமாறனிடன் ஓலை கொடுத்து அனுப்புகிறாள. இலங்கையில் அருள்மொழி
வர்மனுக்கு ஏற்படும் ஆபத்துகளில் எல்லாம் நந்தினி போல் இருக்கும் மந்தாகினி
அம்மாள்(இவர்
நந்தினியின் தாயார் மேலும் சுந்தர சோழனின் முன்னாள் காதலி, சூழ்நிலையால்
பிரிந்தவள்) காப்பாற்றுகிறாள். பல சாகசங்களுக்குப் பிறகு இலங்கையில்
இருந்து திரும்பும் அருள்மொழி வர்மனுக்குப் பாண்டிய விசுவாசிகளால் ஆபத்து ஏற்பட்டு
கப்பல் தீ பிடிக்கிறது. அதிலிருந்து தப்பிய அருள்மொழி வர்மன்
நாகப்பட்டிணம் புத்தவிகாரத்தில் அடைக்கலம் அடைகிறான். அருள்மொழி வர்மன்
இறந்துவிட்டான் என்ற செய்தி சோழ நாட்டில் பரவுகிறது. இதற்குக் காரணம் குந்தவை
என்று குற்றம் சாட்டுகிறார் அமைச்சர். ஆனால் உயிருடன் இருக்கிறான் என்ற
செய்தியை வந்தியதேவன் குந்தவையிடம் உரைக்கிறான்.
வந்தியதேவனுக்கு
உதவியதற்காக சேந்தன் அமுதன் சிறையில் அடைக்கப்படுகிறான். அவனிடம் ஒருவன் சோழ
ராஜ்ஜியத்தையே புரட்டிபோடும் ரகசியம் இருப்பதாகக் கூறுகிறான். ஆனால்
அதனை கேட்க மறுக்கிறான் அமுதன். சேந்தன் அமுதனைச் சந்திக்க குந்தவைச் செல்கிறாள். அப்போதுதான் சோழ நாட்டையே உலுக்கும் செய்தியை அறிகின்றாள்.
அதாவது
உண்மையான மதுராந்தகன் யார் என்று.
ஓரே நேரத்தில் சோழ அரசர்கள் மூவரையும் கொல்லும் சதிவேலையில் ஈடுபடுகிறாள்
நந்தினி. கடம்பூர் மாளிகையில் ஆதித்தனையும், சுந்தர சோழரை
அரண்மனையிலும், அருள்மொழி வர்மனைப் பட்டத்து யானையாலும்
என்று திட்டமிடுகின்றனர். ஆனால் குந்தவை தனது தம்பி ஆதித்தன்
கடம்பூர் வருவதைத் தடுக்க வந்தியதேவனை அனுப்புகிறாள். இதற்கு இடையில்
நாகப்பட்டிணத்தை வெள்ளம் சூழ்ந்ததால் தன்னை வெளிப்படுத்தும் நிலை அருள்மொழி
வர்மனுக்கு ஏற்படுகிறது. அவன் பழையாறை வரும் வழியில் கொல்ல சதி
மேற்கொள்கிறார்கள் பாண்டியனின் ஆபத்துதவிகள். காஞ்சியில்
வந்தியதேவனால் ஆதித்தனை தடுக்க முடியவில்லை. அதனால் ஆதித்தனுடன்
கடம்பூர் செல்கிறான் வந்தியதேவன். கடம்பூர் மாளிகையில் நந்தினையைச்
சந்திக்கும் அறையில் ரகசிய அறைகள் இருக்கிறது. அதில் யாருக்கும்
தெரியாமல் வந்தியதேவன் வேவு பார்க்க இருப்பினும் விபரீதத்தைத் தடுக்க முடியவில்லை.
ஆதித்தன்
இறக்கிறான், அதே நேரத்தில் யானையை மதம் பிடிக்க வைத்துக் கொல்லும் சதியில்
இருந்து மீள்கிறான் அருள்மொழிவர்மன்.
சுந்தரசோழனை
விஷ ஈட்டி எறிந்துக் கொள்ளும் வேளையில் அதனைத் தாங்கி உயிர் துறக்கிறாள் மந்தாகினி.
மதுராந்தக
சோழனாக இருப்பவன் வீரபாண்டியனின் வாரிசு என்று அறிந்து அவனை கைது செய்கையில்
தப்பித்துவிடுகிறான். உண்மையான உத்தம சோழன் சேந்தன் அமுதன்
பதவி ஏற்கிறான். அருள்மொழிவர்மன் தன் அரச பதவியை
சிற்றப்பாவிற்கு விட்டுதந்துவிட்டு இலங்கைக்குப் படையெடுத்துச் செல்கிறான். ஆதித்தனைக்
கொன்ற பழி வந்தியதேவன் மீது விழுகிறது. இந்தப் பழியில் இருந்து வந்தியதேவனை,
பெரிய
பழுவேட்டரையர் காப்பாற்றி இறக்கிறார். குந்தவை வந்தியதேவனை மணக்கிறாள்.
நந்தினி
தன்னைப் பற்றிய ரகசியத்தை அருள்மொழிவர்மனிடன் கூறி இறக்கிறாள்.
பின்குறிப்பு;
கடைசி வரை நந்தினி பற்றிய ரகசியத்தைக் கூறாமல் விட்டு இருப்பார் கல்கி.
நந்தினி
உண்மையில் பாண்டியனின் மகள். அவள் சுந்தரசோழனின் மகளா இருப்பளோ என்ற
சந்தேகத்தில் குந்தவை ஆதித்தனுடன் நந்தினி பழகுவதைத் தடுக்கவே நந்தினியை
வெறுப்பாள். சுந்தரசோழன் காதலித்த பெண் மந்தாகினி என்பதற்காகவே பாண்டியன்
அவளை கந்தர்வ மணம் புரிகிறான். ஆனால் அவள் சுந்தரசோழனை மறக்காமல் தான்
பெற்ற இரட்டை குழந்தையை (நந்தினி, மதுராந்தகன்) செம்பியன்
மாதேவியிடம் கொடுக்கிறார். செம்பியன் மாதேவி தன் மகன்
இறந்துவிட்டதாக எண்ணி வாணியிடம் புதைக்கக் கொடுக்கிறார். அந்த குழந்தையே
சேந்தன் அமுதன். குழந்தை இறந்தாக எண்ணி மதுராந்தகனைத்
தன் மகனாக வளர்க்கிறார் செம்பியன் தேவி. பாண்டியனைத் தன் தந்தை என்றுதான்
கூறுவாள் நந்தினி காதலுடன் ஆத்திரம் கொண்ட ஆதித்தன் கவனிக்காமல் கொன்றுவிடுவான்.
ஆதனால்தான்
நந்தினி காதலித்தவன் தன் தந்தையை கொன்றதைத் தாங்காமல் சோழ சாம்ராஜ்ஜியத்தைப் பழிவாங்க நினைப்பாள். தன்னை கொல்ல விரும்புகிறாள் என்று
தெரிந்தே கடம்பூர் செல்வான் ஆதித்தன். (ஆதித்தன் ஈடு இணையற்ற வீரன்) அவனின்
காதலை மிக அழகாக கூறியிருப்பார் கல்கி. காதலிக்காக அவள் விரித்த வலையில்
விழுந்து பாண்டியர்களால் கொல்லப்படுவான் ஆதித்தன். இந்த ரகசியங்களைச்
சொல்லாமல் படிப்பவர் யூகத்திற்கே விட்டு இருக்கும் கல்கியின் எழுத்து வன்மை அருமை.
ஆரம்பத்தில்
வில்லியாக இருந்த நந்தினி கடைசியில் பாவப்பட்ட பெண்ணாக அனைவரின் அனுதாபத்தையும்
பெற்று விடுகிறாள்.
No comments:
Post a Comment