ஓர் வெள்ளி
- செல்வி அனு
தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்த மோட்டார் வாகன ஓட்டியைப் பதற்றத்துடன் பார்த்துக்கொண்டு
நின்றேன். நான் நின்ற பேருந்து நிறுத்ததில் ஐந்தாறு பேர் இருந்தார்கள். சூடு அதிகமாக
இருந்ததால் யாரும் உட்காரும் எண்ணத்தில் இல்லை. நானும் என் மகளுடன் பேருந்து வருகைக்காக
காத்திருந்தேன். அப்போது எனது மகள்,
'அம்மா வென்டிங் மெசினில் ஏதாவது வாங்க ஒரு வெள்ளி தாருங்கள்' என்றாள்.
கைப்பையில் இருந்து சில்லரைக்காசுகளை எடுத்தேன். மகளிடம் ஒரு வெள்ளியைக்
கொடுத்துவிட்டு மீதம் உள்ள சில்லரையைப் பையில் வைக்கும் போது ஒரு வெள்ளி தவறி ஒடியது,
நான் பதறி ஒடித் தடுத்தேன். பின்னர் குனிந்து எடுத்தவுடன் தான் கவனித்தேன். பேருந்து
நிறுத்ததில் இருந்த அனைவரும் என்னை பார்த்துக்கொண்டு இருப்பதை, எனக்குச் சங்கடமாக இருந்தாலும்
யாரையும் பார்க்காமல் காசை எடுத்து என் பையில் வைத்தேன். இவர்கள் யாருக்காவது தெரியுமா?
இந்த ஓரு வெள்ளி எனக்கு ஒரு நாள் எவ்வளவு முக்கியமாக இருந்தது என்று, மறக்கமுடியாத
அனுபவத்தைக் கொடுத்தது என்று, சொல்கிறேன், இந்த நிகழ்வு பதினைந்து வருடத்திற்கு முன்பு
நடந்தது.
நான் இந்தியாவில் பிறந்து வளர்ந்த பெண். பெண் படிப்பது
எல்லாம் குடும்ப நடத்துவதற்கு தான் வேலைக்கு போக அல்ல என்ற சிந்தனைக் கொண்ட குடும்பத்தில்
பிறந்தவள். ஏராளமான கட்டுபாடுகளுடன் தான் என் பட்டப்படிப்பை முடித்தேன். பட்டப்படிப்பு
முடித்து இரண்டு வருடத்தில் திருமணம். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவரை, இந்தியாவில்
பிறந்து வளர்ந்த நான் திருமணம் செய்துகொண்டேன். வீட்டாரின் அனுமதியுடன்தான். ஆரம்ப
காலத்தில் எங்கள் வாழ்க்கையும் எல்லா புதுமணத் தம்பதிகள் போல் இனிமையாகவே இருந்தது.
திருமணத்திற்காக எடுத்த விடுமுறையை சரி செய்ய வேண்டியக் கட்டாயத்தில் இருந்ததால் சிங்கப்பூர்
வந்தவுடன் வேலையின் பின்னே ஓடத் தொடங்கினார் என் கணவர். பின்னர் என்ன? காலையில் இருந்து
இரவு அவர் வரும்வரை சன் டிவியும், வசந்தம் தொலைக்காட்சியும் தான் என் பேச்சுத் துணை.
வெளியே சென்று யாரிடமும் பேச பயம் எனக்கு, ஏனெனில் மொழி பிரச்சனை அப்போது பெரும் பிரச்சனையாகத்
தெரிந்தது. நான் பேசும் ஆங்கிலம் இங்கு யாருக்கும் புரியவில்லை, அவர்கள் பேசும் ஆங்கிலம்
எனக்கும் புரியவில்லை. படித்திருந்தாலும் பேசினால் யாராவது தவறாக நினைப்பார்களோ என்ற
பயத்திலேயே பேசுவதைத் தவிர்த்துவிடுவேன்.
இரவு தான் என்னவர் வீடு திரும்புவார்,
அதுவரை பேச ஆள் இல்லாமல் இருக்கும் நான், அவர் வந்தவுடன் சேர்ந்து வைத்து நான் மட்டுமே
பேசுவேன். அவர் பேசுவதற்குச் சந்தர்ப்பம் கொடுப்பதில்லை. பாவம்தான் அவரும், இப்பொழுது
புரிகிறது, அப்போது புரியவில்லை.
'கொஞ்ச நேரம் என்னைத் தனியாக
விடு' என்று சில சமயங்களில் சொல்லிவிடுவார். அப்போது நான் மிகவும் காயப்படுவேன். நான்
ரொம்ப தொந்தரவுத் தருவதாக நினைத்து வருந்துவேன். முடிந்தவரை என் கணவர் என்னை வெளியே
அழைத்துச் செல்வார் காடியில் தான், இரவு ஏதாவது டின்னர் அல்லது நண்பர்கள் வீட்டிற்கு
விருந்துக்கு என்று, நான் வெளி உலகத்தைப் பார்ப்பது காடி கண்ணாடி வழியாகத் தான், மற்றபடி
வேறு ஒரு இடமும் தெரியாது. அவரின் நண்பர்கள் வீட்டு விருந்திலும் அனைவரும் ஆங்கிலத்தில்
உரையாடுவார்கள். நான் பார்த்துக்கொண்டு தான் இருப்பேன். அவர்கள் வீட்டில் இருக்கும்
பெரியவர்கள் யாராவது என்னிடம் பேசினால் மட்டுமே உண்டு. அந்த மாதிரி சமயங்களில் நான்
மிகவும் தனிமையாக உணர்ந்தேன். இப்படி நாளாடைவில் நான் பேசுவதே குறைந்துவிட்டது. நான்
சிங்கை வந்து இரண்டு மாதம் ஆகிவிட்டது. அந்நிலையில்
'விசா நீடிக்க வேண்டும், நாளை
காலை 8 மணிக்கு ரெடியாக இரு, எனக்குப் பதினொரு மணிக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு'
என்று என்னவர் கூறினார். நானும் சரி என்று கூறிவிட்டு படுத்துவிட்டேன். அன்று என்னவோ
ஐசிஐயில் நிறையக் கூட்டம். 'இன்று ரொம்ப நேரம் ஆகும் போல இருக்கு, முடிந்தவரை உன்னை
வீட்டில் விடப் பார்க்கிறேன் இல்லை எனில் பேரூந்தில் வீட்டிற்குச் சென்றுவிடு' என்று
கூறிவிட்டு கைத்தொலைப்பேசியில் கவனத்தை வைத்தார் என் கணவர். இதைக் கேட்டவுடன் எனக்கு
என்ன கூறுவது என்றே தெரியவில்லை. ஏன் என்றால் நான் பேருந்தைப் பார்த்து மட்டுமே இருக்கிறேன்
இதுவரை ஏறியது இல்லை. என்னை அறியாமல் சரி என்று கூறிவிட்டேன். எல்லா வேலையும் முடிந்து
வெளியே வர காலை பத்து முப்பது மணியாகி விட்டது. 'சரி நீ 24 எண் உள்ள பேருந்து எடுத்து
பெண்டமியர் பள்ளி பஸ் ஸடாப்பில் இறங்கி வீட்டிற்கு சென்றுவிடு' என்று கூறி என்னை லாவண்டர்
பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார் என் கணவர். நான் காடியில் இருந்து
இறங்கிவிட்டு, தயங்கி, 'என்னிடம் பேருந்து அட்டை இல்லை' என்றேன். பேருந்துல் செல்ல
பயண அட்டை வேண்டும் என்ற விவரம் எனக்குத் தெரியும். காடியை எடுத்தவர், நிறுத்தி 'இல்லை
என்றால் என்ன? ஒரு வெள்ளி போட்டு போய்விடு' என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார். நானும்
முதன் முதலில் பேருந்து ஏறும் ஆவலுடன், சற்று படபடப்பை உணர்ந்தேன். பேருந்து நிறுத்தத்தில் நிறைய பேர் நின்று கொண்டு இருந்தார்கள். எனக்கு
என்னவோ புதியதாக பள்ளிக்குச் செல்லும் மாணவியின் மனநிலையில் இருந்தேன். சரி கைப்பையில்
இருந்து காசை எடுப்போம் என்று கைப்பையில் கையைவிட்டேன். கைப்பையில் என்னுடைய வாலட்
மற்றும் போனைக் காணவில்லை. ஆ! என்று என்னை அறியாமல் சொல்லிவிட்டேன். ஆம், என்னிடம்
கையில் வாலட் இல்லை, அதாவது காசு இல்லை, போனும் இல்லை. சற்று நேரம் ஒன்றுமே புரியவில்லை.
மூளை காலியாகிவிட்டது போல் இருந்தது. என்னால் யோசிக்க முடியவில்லை. சிறிது நேரம் பிடித்தது
என்னுடைய நிலையை நான் புரிந்து கொள்ள, இப்போது என்ன செய்வது, என்னிடம் வீட்டிற்கு செல்ல
காசு இல்லை, யாரிடமாவது சொல்ல வேண்டும் என்றாலும் கையில் கைத்தொலைபேசி இல்லை. சரி பொது
தொலைப்பேசியில் பேச வேண்டும் என்றால் 10 காசு வேண்டும். என்ன செய்வது. சிறிது நேரத்தில்
என்ன செய்வது என்று புரியவில்லை, அப்போது இருந்த என் நிலையை உணர்த்தியது என் அறிவு.
என்னை அறியாமல் கலங்கிவிட்டேன். சற்று நேரம் உட்காருவோம் என்று பேருந்து நிலைய இருக்கையில்
உட்கார்ந்துவிட்டேன். இப்போது என்ன செய்வது. யோசிப்போம்.
எங்கு விட்டேன் என் வாலட்டையும்
கைத்தொலைபேசியையும்? ஆ ஞாபகம் வந்துவிட்டது. நேற்று இரவில் இருந்து என் போனையும் வாலட்டையும்
பார்க்கவில்லை, பார்க்கவில்லை என்பதைக் காட்டிலும் கவனிக்கவில்லை என்று தான் சொல்ல
வேண்டும். நேற்று என் நாத்தனார் எங்களை இரவு சாப்பிட அழைத்து இருந்தார். அங்கு தான்
விட்டு இருக்கவேண்டும். ஏனெனில் அவர் சில பொருட்களைத் தந்தார், அவற்றை எடுத்துக்கொண்டு,
இவைகளை விட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன். காலையில் கிளம்பும் அவசரத்தில் கவனிக்கவில்லை.
ஆனால் இப்போது என்ன செய்வது? என் நிலைமை என்னை மருட்டியது,
பேருந்து நிலையம் வந்து
ஒன்றரை மணி நேரமாகிவிட்டது. இப்போது மணி மதியம் 12 ஆகிவிட்டது. எந்நிலைமை யாருக்குமே
தெரியாது? என்னை இங்கு என் கணவனைத் தவிர யாரும் தேடவும் மாட்டார்கள், அவரோ வேலையில்
இருக்கிறார். அவர் வேலை நேரத்தில் போன் பேசுவதே இல்லை. நான் தான் பேசுவேன். இப்போது
என்ன செய்வது, சரி ஏதாவது காசு நமக்குத் தெரியாமல் கைப்பையில் இருக்கலாம் என்ற நப்பாசையில்
பையில் கைவிட்டுத் துழாவினேன். 'நன்றி கடவுளே, என் கையில் வட்டமாக ஏதோ ஒன்று தட்டுபட்டது,
கட்டயாம் காசு தான்'. அப்பாடி நம் நிலைமை மோசமாகவில்லை என்று பதற்றத்துடன் வேகமாக எடுத்தேன்.
பதற்றமும் ஆர்வமும் சேர்ந்து, கையில் தட்டுப்பட்ட ஒரு வெள்ளி நாணயம் தவறிக் கீழே உருண்டு
ஓடியது. பதற்றத்தில் அதனை தடுக்க குனிந்தேன் அதற்குள் அந்த நாணயம் உருண்டு பக்கத்தில்
இருந்த அல்லூரில் விழுந்துவிட்டது. 'ஐயோ, கைக்கு கிடைத்தது வாய்க்கு வாய்க்கவில்லையே,
கையில் கிடைத்த சொர்க்கத்தை தவறவிட்டது போல் இருந்தேன். காலையில் இருந்து சோதனைக்கு
மேல் சோதனை என்ன செய்வது?' அந்தக் காசு உருண்டு அல்லூரில் ஓடிக்கொண்டு இருந்த தண்ணீரில்
கிடந்தது. எனக்கு அதை எப்படி எடுப்பது என்று தெரியவில்லை. அந்த ஒரு வெள்ளி எனக்கு மிகவும்
அவசியம், ஒரு வெள்ளிக்காக அல்லூரில் இருக்கும் காசை எடுப்பது எனக்குச் சங்கடமாக இருந்தது.
யாரிடமாவது உதவி கேட்பது என்றாலும் மொழி பிரச்சினை மட்டும் அல்ல அது கௌரவ பிரச்சனையாக
தோன்றியது. என்ன செய்யலாம்? ஏதாவது யோசி, யோசி என்று என் மூளை கட்டளையிட்டது. கையில்
இருக்கும் பையில் வேறு காசு இருக்கலாம்மென்றுத் தேடினேன். எதுவும் தட்டுப்படவில்லை.
வைத்தால் தானே கிடைக்கும். என் நிலைமையைப் பாருங்கள். எங்குச் சென்றாலும் காரில் கூட்டிச்செல்லும்
தம்பிகள், இங்கும் காடியில் ஊரைச் சுற்றிக்காட்டும் கணவர், இத்தனை இருந்தும் என்னிடம்
இன்று ஒரு வெள்ளி இல்லை. மீண்டும் அமர்ந்தேன். இப்படி ஒரு பத்து சென்ட் கூட இல்லாமல் ஒரு பேருந்து நிறுத்ததில் நிற்பேன் என்று
கற்பனையாகக் கூட நினைத்தது இல்லை. முற்றிலும் நம்பிக்கையற்று, ஏதாவது தெய்வம் உதவினால்
மட்டுமே உண்டு என்று நம்பிக்கையும், அவநம்பிக்கையுமாக அமர்ந்து இருந்தேன். அப்ப, அப்ப
அல்லூரையும் நோக்கி போகும் பார்வையும் தடுக்க முடியவில்லை. அந்தக் காசு தவறாமல் இருந்திருந்தால்
நாம் இன்னேரம் வீடு சென்றிருக்கலாம் என்று எண்ணாமலும் இருக்க முடியவில்லை. இப்படியே
மேலும் ஒன்றரை மணி நேரம்
ஆகிவிட்டது. இப்போது மணி 1.30. பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. காலையில் அவசரத்தில்
ரொட்டி மட்டுமே சாப்பிட முடிந்தது. இந்த நேரத்தில் எப்போதும் என் கணவருக்கு போன் செய்து
சாப்பிட்டாரா? என்று விசாரிப்பேன்' இன்று முடியாது. என் கணவர் என் போனை எதிர்பார்ப்பாரா
என்றும் தெரியாது ஆனாலும் நான் கேட்பேன்'. சற்று நிமிர்ந்துப் பார்த்தேன். என்னைத்
தவிர அனைவரும் அந்தப் பேருந்து நிறுத்தத்தில் நிற்பவர்கள் புதியவர்கள். மேலும் அரை
மணி நேரமாகியது. அப்போது வேகமாக ஒரு காடி, பேருந்து நிறுத்ததில் வந்து நின்றது. அப்போது
நான் நிமிர்ந்துப் பார்த்தேன். காடியில் இருந்து என் கணவர் இறங்கி கொண்டு இருந்தார்.
அவரைப் பார்த்தவுடன் எனக்கு என் உயிரே திரும்ப வந்தது. வேகமாக எழுந்து யார் இருக்கிறார்கள்
என்றுப் பார்க்கவில்லை ஓடிச்சென்று அவரைக் கட்டிப்பிடித்து அழுதுவிட்டேன். அவர் உடனே
' சரி காடியில் ஏறு' என்றுக் கூறிவிட்டு என்னை அவசரமாக காடியில் அமர்த்தி வேகமாகக்
காடியை எடுத்து, பக்கத்தில் இருந்த கார் பார்க்கில் நிறுத்தினார். என்னால் அழுகையைக்
கட்டுப்படுத்த முடியவில்லை. சிறிது நேரம் கழித்து 'அழாதே' என்றுக் கூறித் தலையைத் தடவித்
தண்ணீர் பாட்டிலை என்னிடம் கொடுத்தார். நானும் காலையிலிருந்து பட்ட மன உளச்சல் மட்டுப்பட
தண்ணீரை அருந்தினேன். பின்னர் நிமிர்ந்து என்னவரைக் கேள்வியுடன் நோக்கினேன். ' நீ எப்போதும்
மதியம் 1.30க்கு போன் செய்துச் சாப்பிடீர்காளா? என்று கேட்பாய், அதனை நான் எப்போதும்
எதிர்பார்ப்பேன், இன்று கால் செய்யவில்லை, வீட்டிற்கு அடித்தேன் யாரும் எடுக்கவில்லை.
சரி என்று கைப்பேசிக்கு அழைத்தேன், அக்கா சொன்னார்கள் நீ வாலட்டையும் போனையும் அங்கு
விட்டுவிட்டாய் என்று, அப்படி என்றால் உன்னிடம் காசும் இல்லை போனும் இல்லை என்பதை உணர்ந்தேன்
அதனால் உன்னைத் தேடி பதற்றத்துடன் தான் வந்தேன். உன்னைக் காணும் வரை நான் நானாக இல்லை.
வேலையிடத்தில் கூட சொல்லவில்லை. அப்பாடா' என்று பெரும் மூச்சை இழுத்துவிட்டார். அவரின்
செய்கையும் பேச்சும், எனக்குள் புதிய கோணத்தைக் காட்டியது......
No comments:
Post a Comment