விருந்தோம்பல்
தமிழரின் தலையாயப் பண்பாட்டுக் கூறு விருந்தோம்பல். தமிழர் வாழ்க்கை முறையில் விருந்தினரை உபசரிப்பது ஓவ்வொரு தலைவன், தலைவியின் தலையாயக் கடமையாகச் சங்க காலத்தில் போற்றப்பட்டது. இல்லற அறத்தில் விருந்தினரைப் பேணுதல் முக்கியக் கடமை. இதற்கான சான்றுகள் சங்க இலக்கியத்தில் ஏராளமாகக் காணக்கிடக்கிறது. விருந்து என்றால 'புதுமை' என்று பொருள். வீட்டிற்கு வரும் புதியவர்களுக்கு உணவு அளித்தல் விருந்தோம்பல் ஆகும். சங்க காலத்தில் ஐவகை நிலப்பகுதியிலும். அந்த நிலத்திற்கு ஏற்ப உணவு விருந்தாக அளிக்கப்பட்டிருப்பதாகச் சங்கப் பாடல் கூறுகிறது.
விருந்தினர் எந்த நேரத்தில் வந்தாலும், தலைவி இன்முகத்துடன் விருந்து பரிமாறுவாள் என்று நற்றிணையில் விருந்தோம்பலின் சிறப்பை, 'அல்லி லாயினும் விருந்துவரின் ........' என்று சிறப்பித்துக் கூறுகிறது. சிறுபாணாற்றுப்படையில் ஒவ்வொரு ஊரிலும் கிடைக்கும் உணவு மற்றும் விருந்தோம்பல் பற்றிக் கூறப்பட்டுள்ளது. பட்டினப்பாலையில் விருந்தினர்களுக்காக வடித்த கொலு கஞ்சி 'யாறுபோல் பரந்தொழுகி' என்கிறது. இவ்வாறு விருந்தின் சிறப்பைச் சங்கப் பாடல் மூலம் அறியலாம். குடும்பத்தில் பிணக்கு ஏற்பட்டால் தீர்த்து வைப்பதற்காக யாராவது விருந்தினர் வரமாட்டார்களா? என்று தலைவன் ஏங்குவதாக நற்றிணை சிறப்பிக்கின்றது.
விருந்து போற்றுதலை உணர்ந்த திருவள்ளுவர் விருந்தோம்பல் என்று ஓர் அதிகாரத்தையே படைத்துள்ளார். அமிழ்தமாக இருந்தாலும் விருந்தினருக்குக் கொடுத்துவிட்டு உண்பதுதான் நமது மரபு என்கிறார். விருந்தினரை நோப்பக் குழையும் அனிச்சம் என்கிறார் வள்ளுவர். விருந்தோம்பலை இத்தனை சிறப்பாகச் சொல்ல முடியாது.
சிலப்பதிகாரத்தில் விருந்தோம்பலின் சிறப்பை அழகாகக் கூறியிருப்பார் இளங்கோவடிகள். கண்ணகியைப் பிரிந்து கோவலன் மணிமேகலையுடன் வாழும் போது கண்ணகி தலையாயக் கடமையான விருந்தோம்பலை மறந்து இருந்தாள் என்று குறிப்பிடுகிறார். மேலும் இருவரும் அடைக்கலமாகச் சென்ற போதும் விருந்தோம்பலின் சிறப்பைப் பாடியுள்ளார். மணிமேகலை, விருந்தோம்பல் சிறப்பை இல்லறத் தருமமாகக் காட்டாமல் மடப்பள்ளிகளில், மடாலாயங்களின் கடமையாகக் காட்டியுள்ளது. அதனால் தான் 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்று கூறுகிறது மணிமேகலை.
பக்தி இலக்கியத்தில் விருந்தோம்பல்
சமண, பௌத்த மதங்களினால் பெண்களின் செல்வாக்கு குன்றிய காலத்தில் பக்தி இலக்கியம் இல்லறத்தின் பெருமையைச் சாற்றியது. இதன் மூலம் விருந்தோம்பல் இல்லற தர்மத்தின் முக்கிய கடமையாகப் போற்றப்பட்டது பக்தி இலக்கியக் காலத்தில். பெரியபுராணத்தில் சிவனடியார்களுக்கு விருந்து படைக்காமல் உண்ண மாட்டார் அப்பூதி அடிகள். பிள்ளை இறந்ததை மறைத்து அப்பருக்கு விருந்து படைப்பது, தன் துன்பத்தை விட விருந்தோம்புவது தலையாயக் கடமையாகக் கருதியமையைக் காட்டுகிறது. மேலும் சிவனுக்குப் பிள்ளைக் கறியைச் சமைத்ததாகவும் பெரியபுராணம் காட்டுகிறது. இதன் மூலம் இல்லற தர்மத்தில் விருந்தோம்பல் இறையுணர்வின் அங்கமாகவே காட்டப்படுகிறது. இதற்கு நிறைய உதராணங்களைச் சுட்டலாம்.
இதிகாசத்தில் விருந்தோம்பல்
கம்பராமாயணத்தில் விருந்தோம்பல் பண்பினை கம்பர் இவ்வாறு கூறியிருப்பார்.
'அருந்து மெல்லடகு ஆரிட அருந்து மென்று அழுங்கும்....
விருந்து கண்டபோது என்னுறுமோ என்று விம்மும்'
என்று சீதை அசோகவனத்தில் இருக்கும் போது 'இராமன் தான் இல்லாமல் விருந்தினருக்கு விருந்து படைக்க என்ன செய்வானோ' என்று நினைத்து வருந்துவதாக விருந்தின் சிறப்பைக் கூறியிருப்பார். (கம்பராமாயணம் காட்சிப்படலம் 15). மற்றொரு காட்சியில் குகனின் விருந்தோம்பல் பண்பையும் குறிப்பிட்டுடிருப்பார்.
சிற்றிலக்கியங்களில் விருந்தோம்பல்
சாதாரண மக்களின் வாழ்க்கையைச் சொன்ன இலக்கியம் சிற்றிலக்கியம். அவற்றிலும் விருந்தினர்களுக்கு என்ன? எப்படி? அளிப்பார்கள் என்று குற்றாலக் குறவஞ்சியில் கூறியிருப்பார். 'தேனும் தினைமாவும் விருந்தருந்த தருவோம்' என்று குறமக்களின் வாழ்கையில் இருக்கும் விருந்தோம்பல் முறையைக் காணலாம். இப்படிச் சமூகத்தில் உயர்ந்த குலத்தவர் முதல் கீழ்நிலை மக்கள் வரை விருந்தோம்பலைப் போற்றிய பண்பைக் காணலாம்.
இருபதாம் நூற்றாண்டில் விருந்தோம்பல்
ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலும் மக்கள் விருந்தோம்பலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக நிறையச் செய்திகள் இருக்கின்றன. சுதந்திரப் போராட்டத்தின் போது தன் மகனின் நோயைக் குணப்படுத்த வைத்திருந்த பணத்தை எடுத்து போராட்டக்காரர்களுக்கு விருந்து படைத்ததாகச் செவிவழி செய்தி உள்ளது. அந்த அளவிற்குப் போற்றியுள்ளனர். பாரதிதாசனின் இருண்டவீடு விருந்தோம்பல் பற்றிக் கூறுகிறது. அக்காலத்தில் வீட்டிற்கு வீடு திண்ணை வைத்துக் கட்டினார்கள். போக்குவரத்து அதிகம் இல்லாத காலத்தில் கால்நடையாக வருபவர்கள் அமர்ந்து இளைப்பாற அவர்களுக்கு உணவு அளிக்கும் வழக்கம் இருந்தது. சென்ற நூற்றாண்டு வரை ஊர்தோறும் சத்திரம் என்ற இடம் இருந்தது. அதில் யார் வேண்டுமென்றாலும் தங்கலாம். தங்கியவர்களுக்கு உணவு அளிப்பது வழக்கமாக இருந்தது. பின்னர்க் காலப்போக்கில் சத்திரம் செயல் இழந்தது விட்டன. ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னால் வரை திண்ணை வைத்த வீடு இருந்தது. பின்னர்ப் போக்குவரத்து அதிகரித்தது, இடம் நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாகத் திண்ணை வைத்த வீடுகளும் குறைய ஆரம்பித்தது. சமுதாயத்திற்காக வீடு கட்டிய போது விருந்தோம்பல் பண்பு இருந்தது, தனக்காக வீடு கட்டிய போது இந்தப் பண்பு மறைந்துவிட்டது. இன்று விருந்தோம்பல் என்றால் உற்றார் உறவினர்கள் அழைத்து விருந்து பறிமாறுவது என்று நிலைமை மாறிவிட்டது. அதுவும் இக்காலத்தில் வருவதற்கு முன்னால் அறிவித்துவிட்டு தான் வரவேண்டும்.
சிங்கப்பூர் போன்ற குடி பெயர்ந்த நாடுகளில் விருந்தோம்பல் தெரிந்தவர்களை உபசரித்தல் என்று மாறிவிட்டது. இங்கு உணவுக்கு என்று யாரையும் சார்ந்து வாழும் முறை இல்லை. அதனால் விருந்தோம்பல் என்ற பண்பாடு மறைந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைமை அதிகாரியாக இருந்த ராஃப் காப்மென் என்ற ஆங்கிலேயர், 'மற்ற விமானச் சேவையைவிடச் சிங்கப்பூர் விமானச் சேவைச் சிறப்பாக இருக்கத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பை எடுத்துச் செயல்படுத்தினேன் அதனால் தான் இன்று உலகதர வரிசையில் இடம் பிடிக்கமுடிந்தது' என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நாம் உலகிற்கு அளித்த கொடைகளில் ஒன்று விருந்தோம்பல்.
விருந்தோம்பல் மறைந்ததற்கான காரணம்
இன்று மக்கள் தொகை அதிகரித்துவிட்டதால் உணவுப் பற்றக்குறை அதிகரித்து வருகின்றன. இதில் தெரியாதவர்களுக்காக உணவை வீணாக்கக்கூடாது என்ற எண்ணம் பெரும்பான்மையான மக்களிடம் இருக்கிறது. தெரிந்தவர்களுக்காக உணவு சமைப்பது எளிது, உணவு வீணாவதில்லை. விருந்தோம்பிய உணர்வு ஏற்படுவதால் இதனையே விருந்தோம்பல் என்று அனைவரும் நம்பத் தொடங்கிவிட்டார்கள். விருந்தோம்பல் பண்பு வெளிநாடுகளில் வாழும் மக்களிடமும் முற்றிலும் மறைந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் பிறரிடம் எதிர்பார்க்கும் சமூகச் சூழல் வெளி நாடுகளில் இல்லை என்பதே காரணம்.
முடிவுரை
தமிழர்களின் தலையாயப் பண்பு. இல்லற வாழ்க்கையின் முக்கிய கடமையாகப் போற்றப்பட்ட விருந்தோம்பல் சென்ற நூற்றாண்டு வரை மக்களிடம் செல்வாக்கு பெற்று இருந்தது. இன்று விருந்தோம்பல் என்ற பண்பாடு மெல்ல மறைந்து வருகிறது. தன்னிடம் இருப்பதை மற்றவர்களுக்கு அளிப்பது மானிட மரபு. மனிதன் சமுதாயமாக வாழ்பவன், சமுதாயத்துடன் ஒன்றி வாழ்வதற்கு, விருந்தோம்பல் பாலமாக இருந்தது. உளவியல் ரீதியாகப் பிறர்க்குக் கொடுப்பது இன்பம் பயக்கும். இதனை நமது சான்றோர்கள் அறிந்து இருந்தார்கள், அதனால் இல்லற தர்மமாகப் போற்றினார்கள். எப்போது சுய நலம் அதிகரித்ததோ அன்றே சில சிக்கல்கள் சமுதாயத்தில் தோன்ற ஆரம்பித்தது. விருந்தோம்பல் மறைமுகமாகச் சமுதாய ஒற்றுமைக்கு வழிவகுத்தது. அதனால் அனைவரும் விருந்தோம்பலைப் போற்றுவோம்.

மறந்து போன விருந்தோம்பல் நமக்கு விருந்தாய் நினைவுபடுத்திய ஆசிரியர் அவர்களுக்கு நன்றி
ReplyDeleteவிருந்தோம்பலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காலத்திற்கேற்ப உள்ளது. எனினும் தமிழரின் இப்பண்பு உறவுகளை வலுவாக்குகிறது. தமிழரின் இப்பண்பு என்றென்றும் பொற்றத்தக்கதே!
ReplyDeletegreat information
ReplyDeleteகோவலன்_மாதவியுடன் வாழ்ந்தான்.
ReplyDelete