தமிழ்மொழி மாதத்தினையொட்டி தங்கமீன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதைப் பயிலரங்கில் பங்கு பெறும் வாய்ப்பினைப் பெற்றேன். மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. பயிலரங்கு. சிறுகதைக் கூறுகள் எட்டாக பிரித்து, அந்தக் கூறுகளின் அடிப்படையில் எட்டு சூழல்கள் கதைக்கருவாக தரப்பட்டது. பங்கு பெற்ற அனைவருமே சிறந்த படைப்பாளர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. எழுதும் எட்டு கதைகளையும் எட்டு சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் மதிப்பீடு செய்தார்கள். அவர்கள் தந்த மதிப்பீடும் உற்சாகமும் என்னைப் போன்ற ஆரம்ப நிலை எழுத்தாளர்களுக்கு ஊக்கமாக இருந்தது. அவற்றில் நான் எழுதிய சிறுகதையும், சிறுகதைக்கான சூழல், மற்றும் சிறுகதை ஆசிரியர்கள் தந்த கருத்துக்களையும் பதிவிட விரும்புகிறேன்.
சூழல்
தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூருக்குப் பணிபுரிய வந்திருக்கும் ஓர் ஊழியனுக்கு திடீரென்று ஊருக்குச் செல்லவேண்டும் என்ற நிலை, ஆனால் அவனால் ஊருக்குச் செல்ல முடியவில்லை. இந்தச் சூழலையொட்டி நான் தொடங்கிய கதை,
'ணிங், ணிங்', ணிங்' என்ற சத்தம் எங்கோ கேட்டது. இந்த நேரத்தில் யாரு என்று யோசிக்க முடியாமல், கண்ணைத் திறக்க முடியாமலும் அசைந்தான் சக்தி. ப்ச்' சலிப்பாகத் திரும்பிப் படுத்தான். 'ஏய் சக்தி உன்னைத்தான்' என்று பாபு எழுப்பிக்கொண்டு இருந்தான். என்னடா? என்றான் சலிப்புடன். இன்று பத்தாவது மாடியில் வேலை, ஏறி இறங்கிய அழுப்பு குரலில் தெரிந்தது. அவனும் தூக்கக் கலக்கத்தில் 'டேய் உன் போன் அடித்துக்கொண்டே இருக்குடா' என்றான். யாரு, இந்த நேரத்தில், இமைகள் இரண்டையும் பிரிக்கமுடியாமல் பிரித்தான் சக்தி. 'ஹலோ' எதிர்முனையில் 'அண்ணா' என்ற கலக்கிய குரலில் எழுந்து உட்கார்ந்தான் 'என்னடா? என்ன? இந்த நேரத்தில் கால் செய்கிறாய், குரலும் சரியில்லை' என்றான் அவசரமாக, அடுத்து அண்ணா என்ற அழைப்பில் குரல் தழுதழுத்தது. ஏதோ விபரீதம் என்று மனசுக்குப் புரிய, என்னவென்று சொல்லுடா' என்று அதட்டினான். 'அண்ணா அப்பாவிற்கு அட்டாக் வந்து ஐ.சி வில் வைத்திருக்கிறோம், என்ன செய்வது என்று புரியவில்லை, நீ கிளம்பி வருகிறாயா? என்று கேட்டான். முதலில் ஒன்றும் புரியவில்லை, ஆனால், தம்பி சொல்வதை மூளையில் பதியவே சிறிது நேரம் எடுத்தது. எப்படிடா? நல்லாதானே இருந்தார் நேற்று பேசும்போது கூட நல்லாதானே பேசினார்' என்றான் பதற்றத்துடன்.
'தம்பி நான் சித்தப்பா பேசுகிறேன் என்று போனை வாங்கி பேசினார் சித்தப்பா. 'தம்பி ஆறு மாதத்திற்கு முன்னே அண்ணனுக்கு முதல் அட்டாக் வந்து இருக்கு ஆனால் அவர் நம்மகிட்டச் சொல்லாமல் மறைத்துவிட்டார். இது இரண்டாவது அட்டாக் என்பதால் நிலைமைக் கொஞ்சம் சிரியஸ்தான்' இன்னும் இருப்பத்தி நான்கு மணி நேரம் கழித்துத்துதான் எதுவும் சொல்லமுடியும் என்று டாக்டர் சொல்கிறார், நாங்கள் எல்லோரும் இருக்கிறோம், வரமுடிந்தால் வா' என்று கூறும் போதே எப்படியும் வந்துவிடு என்று வேண்டுதல் இருந்தது. எதுவும் சொல்லமுடியாமல் 'இங்கு மணி 1 இப்போது எதும் சொல்லமுடியாது. காலையில் தான் யாரையும் கேட்கமுடியும், கேட்டுவிட்டு என்ன செய்வது என்று பார்க்கிறேன். இடை இடையே எனக்கு போன் செய்யுங்கள் என்று கூறிவிட்டு போனை அடைத்தான்.
'என்னடா பிரச்சனையா? என்றான் பாபு, ஆமாம், இப்போ தூங்குக் காலையில் பேசுவோம் என்றான். தனக்கே விசயத்தை ஜீரணிக்க சிறிது நேரம் தேவை என்பதால், அமைதியாக உட்கார்ந்துவிட்டான். 'அப்பா' எப்படி இருக்கிறீர்கள் அவனையறியாமல் மனம் கதறத்தொடங்கியது. அப்பா, எப்படி என்னிடம் சொல்லாமல் இருக்க முடிந்தது. எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று தைரியம் சொல்வீர்களே இப்போதும் மட்டும் ஏன் சொல்லவில்லை, ஆம், ஆறு மாதத்திற்கு முன்னே சொல்லவில்லை தானே, எனக்கு தெரியுது, ஏஜென்ட் பணத்தை எடுத்துக்கொண்டு ஏமாற்றியத்தருணங்களில் தான் சொல்லாமல் விட்டு இருக்கவேண்டும், அதன் பிறகும் கடனை வாங்கி என்னை அனுப்பிய போது கூட எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னீர்களே, இப்போ நான் எப்படி வருவது, நீங்கள் சொல்லாவிட்டாலும் கடன் சுமை நம் குடும்பத்தை அழுத்துகிறது என்பதை அறியாதாவனா நான்? இப்போ என்ன செய்ய, இரண்டு நாள் முன்னாடி கூட கம்பெனியில் வேலைச் செய்பவன் அம்மாவுக்கு முடியவில்லை ஊருக்குப் போக கேட்டபோது, 'வேண்டும் என்றால் பர்மிட் கேன்சல் செய்துவிட்டு போ' என்று சொல்லிவிட்டார்கள், அவர்களுக்கு இன்னும் இருபது நாள்களில் வேலை முடித்துக் கொடுக்கவேண்டிய கட்டாயம், அவரவர்களுக்கு, அவர்களின் தேவைதான் முக்கியம், இப்போது நான் ஊருக்குப் போக கேட்டால், பர்மிட் கேன்சல் செய்தாக சொன்னால் என்ன செய்வது, வேலைக்குச் சேர்ந்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது, வாங்கிய கடனும் வட்டியும் கழுத்தை நெரிக்கிறது, இந்த நிலையில் நீங்களும் என்னைக் கைவிட்டால் நான் என்ன செய்வேன், கடவுளே என் அப்பாவையும் என் குடும்பத்தையும் காப்பாற்று' என்று மனதிற்குள் அழுதபடியே, இருளை வெறிக்கத்தொடங்கினான்.
இந்தக் கதைக்கு 'மெட்டி ஒலி' எழுத்தாளர் பாஸ்கர் சக்தி அவர்களின் கருத்து,
கலைச்செல்வி மாரியப்பன் எழுதி இருக்கும் இந்தக் கதை வெகு கனமானதொரு துவக்கத்தை கொண்டிருக்கிறது. இதிலும் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் எனும் அவலச் செய்திதான் துவக்கம். ஆனால் கதாநாயகனது சூழ்நிலை. கடன் அழுத்தம் , லீவு கேட்டால் வேலை போகும் சிக்கல் ஆகியவை கதையின் கனத்தைக் கூட்டுகின்றன. இதில் வரும் ஒரு வாக்கியம் என்னை மிகவும் பாதித்தது. ``இரண்டுநாள்முன்னாடிகூடகம்பெனியில்வேலைச்செய்பவன்அம்மாவுக்குமுடியவில்லைஊருக்குப்போககேட்டபோது, 'வேண்டும்என்றால்பர்மிட்கேன்சல்செய்துவிட்டுபோ' என்றுசொல்லிவிட்டார்கள், அவர்களுக்குஇன்னும்இருபதுநாள்களில்வேலைமுடித்துக்கொடுக்கவேண்டியகட்டாயம், அவரவர்களுக்கு, அவர்களின்தேவைதான்முக்கியம், இப்போதுநான்ஊருக்குப்போககேட்டால், பர்மிட்கேன்சல்செய்தாகசொன்னால்என்னசெய்வது, வேலைக்குச்சேர்ந்துஇரண்டுமாதங்கள்தான்ஆகிறது, வாங்கியகடனும்வட்டியும்கழுத்தைநெரிக்கிறது, இந்தநிலையில்நீங்களும்என்னைகைவிட்டால்நான்என்னசெய்வேன்," இதில் வரும் நீங்களும் என்னை கைவிட்டால் நான் என்ன செய்வேன் என்று அவன் தன் அப்பாவிடம் மானசீகமாக இறைஞ்சுகிறான். இது மனதை உலுக்குகிற ஒரு இடம். ஒரு கதை டெக்னிகலாக சிறப்பாக எழுதப் படுவது எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு அந்தக் கதையில் தென்படும் உணர்வுகள் வலுவான வாக்கியப் பிரயோகங்களால் வெளிப்படுத்தப் படுவதும் முக்கியம். இந்த வாக்கியங்களில் காணப்படும் தவிப்பு இருக்கிறதே. அது நம் எல்லோரையும் உலுக்கி விடும்..எழுதும் கதைக்குள் எழுதுபவன் தோய்ந்து அதில் வரும் கதாபாத்திரத்தின் உணர்வுகளை தானே உணர்ந்து அனுபவித்து எழுதினால்தான் இப்படிப் பட்ட வெளிப்பாடு சாத்தியமாகும். வாழ்த்துகள்.